அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 37-38
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 37-38   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Tuesday, 04 October 2005

37.

என்று சுந்தரம், பதஞ்சலிக்குக் கற்பு என்ற வார்த்தைக்குத் தன்னால் இயன்றவரை விளக்கம் கொடுத்தானோ, அன்றிலிருந்து அவனும் வெகுவாக மாறிப் போனான். ஒரு பெண் எதற்காகக் கற்பிழக்கின்றாள்? அவளை ஏன் ஒரு ஆண் கற்பிழக்கச் செய்கின்றான்? என்ற வினாக்களெல்லாம் அவன் நெஞ்சைக் குடைந்தபோது, அவற்றையிட்டுப் பல நாட்களாக அவன் சிந்தித்திருந்தான்.

என்னுடைய மனம் எதற்காகப் பதஞ்சலியையே சுற்றிச் சுற்றி வரவேண்டும்? அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் உடலிலும், உள்ளத்திலும் பொல்லாத உணர்வுகள் கிளர்ந்து ஏன் என் மனதை கலைக்கின்றன? கள்ளமற்ற வெள்ளையுள்ளம் கொண்ட கதிராமனின் மனைவி அவள் என்றறிந்தும் ஏன் நான் அவளுடைய குரலைக் கேட்டுப் பரவசமடைகின்றேன்? என்றெல்லாம் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் சுந்தரம். அவன் எவ்வளவுதான் ஆழமாகச் சிந்தித்தாலும், தான் ஏன் இந்த உணர்வுகளுக்கெல்லாம் ஆட்படுகின்றேன் என்பதற்குத் தெளிவானதாகவும், ஏற்கக் கூடியதாகவும் விடையெதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தன் மனம் எதற்காகத்தான் அவளை விரும்பியபோதும், அவளை அப்படி விரும்புவதற்கோ அல்லது ஆற்றொழுக்குப்போல் போய்க்கொண்டிருக்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வில் தலையிடுவதற்கோ தனக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்ற ஒன்றைமட்டும் அவன் எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமின்றிப் புரிந்துகொண்டான்.

இயல்பாகவே விவேகமான அவனுடைய மனம், 'இனிமேல் நீ அங்குபோய் பதஞ்சலியுடன் பழகுவது முறையல்ல!" என்று எச்சரித்தது. 'பதஞ்சலியை உன் தங்கைபோல் எண்ணி உன்னால் பழகமுடியாது! உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே! ஆதலால் அங்கு போவதை அடியோடு நிறுத்திவிடு! அவசியமானல் இந்தக் கிராமத்தையே விட்டு எங்காவது போய்விடு! அழகியதொரு கவிதையைப் போன்று இனிக்கும் அந்த இளந்தம்பதிகளின் இன்பவாழ்வைச் சிதைத்து விடாதே!" என்றெல்லாம் அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆனால் நுண்ணிய உணர்வுகளைக் கொண்ட அவனுடைய இதயம், 'பதஞ்சலி இந்தப் பிறப்பில்தான் இன்னொருவனின் மனைவியாகிவிட்டாள். காலங்காலமாக அவள் உன்னுடையவளாகத்தான் இருந்திருக்கின்றாள். இல்லையேல் இதுவரை கோடுபோட்டு வாழ்ந்த நீ எதற்காக அவளைக் கண்டதுமே உன் இதயத்தைப் பறிகொடுத்து விட்டாய்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தண்ணிமுறிப்பில் இருக்கப் போகின்றாய்? ஆசிரியர் கலாசாலைப் பரீட்சைக்குத் தோற்றிய நீ நிச்சயமாக அதில் தேறிவிடுவாய்! அப்படியானால் இந்த வருட இறுதிவரைதானே நீ இங்கிருப்பாய்! இந்த இரண்டு மாதங்களில் நீ அங்கு போய்வருவதில் என்னதான் கெட்டுப்போகும்? இந்தச் சில நாட்களுக்காவது உன்னைப் பிறவிகள்தோறும் தொடர்ந்துவரும் பதஞ்சலியின் அருகிலேயே இருந்துவிடு!" என்று கெஞ்சியது.

சுந்தரலிங்கத்தின் விவேகம் நிறைந்த மனச்சாட்சியும், ஆசைகளில் ஊறிய இதயமும் தர்க்கித்துக் கொண்டபோது, இறுதியில் வெற்றியடைந்தது அவனுடைய இதயமேதான்!

ஒவ்வொரு நாளும் துடிக்கும் நெஞ்சுடன் பதஞ்சலியின் விட்டுக்குச் செல்வான். அவள் பரிமாறும் சோற்றின் ஒவ்வொரு பருக்கையையும் உருசித்துச் சாப்பிடுவான். அவன் கொடுத்த புத்தகங்களை அவள் கொஞ்சங் கொஞ்சமாக வாசித்து விளங்கிக் கொண்டபோது அவளுடைய திறமையைக் கண்டு மகிழ்ந்தான். அவள் அங்குமிங்கும் தங்கத்தேர் போன்று அசைந்து நடக்கையில், மனங்கொண்ட மட்டும் அந்தத் தெய்வீக அழகைத் தன் இதயத்தில் நிறைத்துக் கொண்டான்.

இந்த இரண்டு மாதங்களில் பதஞ்சலியும் அவளையறியாமலே ஒரு மெல்லிய மாற்றத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தாள். அவள் எழுத்துக்கூட்டிப் படித்த புத்தகங்கள், அவளை மெல்ல மெல்ல ஒரு புதிய உலகின் வாசல்களுக்கு அவளை அழைத்துச்செல்ல ஆரம்பித்திருந்தன. அந்தப் புதிய உலகத்தின் நடவடிக்கைகளும், நிகழ்ச்சிகளும் அவளுக்கு மிகவும் புதுமையாகவும், ஏதோ சில உணர்வுகளைக் கிளறிவிடுபவையாகவும் இருந்தன. பூட்டியிருக்கும் ஒரு அறையைப் பார்க்கக் கூடாதென்று உத்தரவிடப்பட்டிருந்த ஒரு குழந்தையின் முன், அந்த அறையின் கதவுகள் திடீரெனத் திறந்துகொண்டது போன்ற உணர்வு. அதற்குள் என்னதான் இருக்கின்றது பார்க்க ஆசைப்படும் ஒருவகை ஆவல்! அப்படி இரண்டொரு தடவை எட்டிப் பார்த்தபோதும், அங்கு கண்டவற்றை இனங்கண்டு கொள்ளமுடியாத ஒரு தவிப்பு! இத்தகைய அனுபவங்களைத்தான் அந்தப் புத்தகங்கள் அவளுக்கு ஏற்படுத்தியிருந்தன.

நிலக்கிளியைப் போன்று, தன் இருப்பிடத்தையும், கதிராமனையும் மட்டுமே இதுவரை சுற்றிப் பறந்த பதஞ்சலியின் களங்கமற்ற உள்ளத்தை, அந்தச் சின்ன வாழ்க்கை வட்டத்திற்கு வெளியேயும் இடையிடை பறப்பதற்குத் தூண்டின அந்தப் புத்தகங்கள். ஆனால் இந்த எல்லைமீறுதல்கள் யாவும் தெளிவற்றவையாக, ஒருசில நிமிடங்களுக்கு நீடிப்பவையாகத்தான் இருந்தன. இதன் காரணமாகப் பதஞ்சலி தன் வழமையான குறும்பையும், குதூகலத்தையும் ஓரிரு நிமிடங்கள் ஒதுக்கிவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்துபோவாள். ஆனால் மறுகணம் தன் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் சிறகடித்துப் பறப்பவளாக, பழைய பதஞ்சலியாக மாறிவிடுவாள்.

 
38.

அன்று சுந்தரத்துக்கு நல்லூர் ஆசிரியர் கலாசாலையிலிருந்து கடிதம் வந்திருந்தது. பிரவேசப் பரீட்சையில் அவன் தேறியிருப்பதாகவும், தைமாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் அவனை அங்கு வரும்படியாகவும் கூறியது அந்தக் கடிதம்.

அந்தக் கடிதத்தைக் கண்டதுமே, எதிர்பார்த்த முடிவு வந்துவிட்டது, தானும் இனி ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியன், தனக்கும் நிரந்தரமானதொரு தொழில் கிடைத்துவிட்டது என மகிழ்ந்துபோனான் சுந்தரம். மறுகணம் பதஞ்சலியைப் பிரிந்து போகவேண்டுமே என்று அவன் மனம் வேதனைப்பட்டுக் கொண்டது. அன்று மத்தியானம் சாப்பிடச் சென்றபோது அவன் விஷயத்தைச் சொன்னதும், கதிராமனும் பதஞ்சலியும் அச் செய்தியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. 'என்ன வாத்தியார், நீங்கள் இஞ்சை வந்து ஒரு வரியமாகேல்லை. அதுக்கிடையிலை போக வெளிக்கிடுறியள்!" என்று குறைப்பட்டுக் கொண்டார்கள். அவன் விஷயத்தை மேலும் தெளிவாக விளக்கியபோது, 'அப்பிடியே சங்கதி! இரண்டு வரியம் படிச்சு முடிஞ்சதும பெரியவாத்தியாராய் இஞ்சை வருவியள்தானே!" என்று பதஞ்சலி ஆறுதல்பட்டுக் கொள்கையில் சுந்தரத்துக்கு நெஞ்சை எதுவோ செய்தது.

அவன் எந்த முடிவுக்குக் காத்திருந்தானோ அந்த முடிவு வந்துவிட்டது. பதஞ்சலியின் சின்னக் குடிசையைச் சுற்றிப் படர்ந்திருக்கும் தன் ஆசைக் கொடிகளை இனிமேல் அறுத்துக்கொண்டு போகவேண்டுமே என அவன் இதயம் வேதனைப் பட்டது. ஆனால் அவன் மனம், 'இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இனிமேலும் அது நிகழாமலிருப்பதற்கு இதைவிட வேறு வாய்ப்பும் இல்லை! எனவே வேதனைப்படாதே!" என்று தேறுதல் கூறியது.

அடுத்த நாள் மாலையில் சுந்தரலிங்கம் தான் தண்ணிமுறிப்பை விட்டுச் செல்லும் விஷயத்தை மலையரிடம் தெரிவப்பதற்காக அங்கு சென்றிருந்தான். அங்கே மலையர் முற்றத்தில் மான்தோலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு போத்தல் சாராயம் இருந்தது. தை மாதத்தில் அவன் தண்ணிமுறிப்புக்கு முதலில் வந்தபோது கண்ட மலையருக்கும் இன்று காணும் மலையருக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தான். மழை தண்ணியின்றி வரண்டிருந்த அவருடைய வளவைப் போன்றே அவரும் உடற்கட்டிழந்து உருக்குலைந்து போயிருந்தார். சுந்தரம் செய்தியைச் சொன்னதும், அவர் பெரியமனுஷத் தோரணையில் 'அது நல்லதுதானே தம்பி! ஆனால் எம்பியிட்டைச் சொல்லிப் பள்ளிக்கூடத்துக்கு வேறை ஆளைப் போடோணும். நான் அவரிட்டை ஒருக்காப் போகத்தான் வேணும்!" என்று கூறிக்கொண்டார். விஷயத்தை அறிந்த பாலியாரின் மனம் விழுந்துவிட்டது. துயரினால் ஆரோக்கியம் குன்றியிருந்த அவள், 'இனிமேல் ஆர் எனக்கு என்ரை புள்ளையைப்பற்றி அடிக்கடி வந்து சொல்லப்போகினம்!" என்று மனதுக்குள் வேதனைப் பட்டுக்கொண்டாள். இருப்பினும் அதை வெளிப்படையாகக் கூற இயலாமல், 'இவ்வளவு நாளும் தம்பி ராசு நல்ல விருப்பமாயப் படிச்சான். இனி ஆரார் வருகினமோ?" என்று பெருமூச்செறிந்து கொண்டாள். அவர்களிடமிருந்து சுந்தரலிங்கம் விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், அவனெதிரே ராசு வந்துகொண்டிருந்தான்.

அவனுடைய கைப்பிடியிலே ஒரு நிலக்கிளி காணப்பட்டது. மரகதப் பச்சை நிறமான அதன் இறகுகள் மாலை வெய்யிலில் பளபளத்தன. சுந்தரம் அந்த நிலக்கிளியை ராசுவிடமிருந்து கையில் வாங்கிப் பார்க்கையில், அது மனிதக் கரங்கள் தன்மீது பட்டுவிட்டனவே என்ற துடிப்பில் படபடவெனச் சிறகுகளை அடித்துக்கொண்டது. தன் குண்டுமணிக் கண்களை மலங்க மலங்க விழித்துக்கொண்டே அது அவனைப் பரிதாபமாப் பார்த்தது. 'இதை என்னண்டு ராசு புடிச்சனீ" என்று சுந்தரம் கேட்போது, 'இதுகளைப் புடிக்கிறது வெகு சுகம் வாத்தியார்! இதுகள் தங்கடை நிலப் பொந்துகளுக்குக் கிட்டத்தான் எப்பவும் இருக்குங்கள்! பொந்து வாசலிலை சுருக்கு வைச்சால் சுகமாய்ப பிடிபட்டுப்போடுங்கள்!" என்று ராசு பெருமையடன் கூறினான்.

பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. காட்டுக் கிராமங்களில் வாழ்பவர்கள் இருண்டு சற்று நேரத்திற்குள்ளாகவே சாப்பாட்டை முடித்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். சுந்தரமும் இரவு ஏழுமணிக்கே பதஞ்சலி வீட்டில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு அறைக்கு வந்துவிடுவான். இன்றும் அவ்வாறு சாப்பிட்டுவிட்டு வரவேண்டுமென்ற எண்ணத்தில் அவன் அங்கு சென்றபோது, கதிராமன் இரவு வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

காடியரிடம் துவக்கை வாங்கிக்கொண்டு அவன் இரவு வேட்டைக்குப் போவது வழக்கம். அவன் சென்றபின் பதஞ்சலி குடிசைக்குள் அரிக்கன் லாம்பைக் கொளுத்தி வைத்துக்கொண்டு தூங்கிப் போவாள். அவளுக்குத் தனியே படுப்பதில் பயமெதுவுமில்லை. இன்றும் கதிராமனுக்கும், சுந்தரலிங்கத்துக்கும் சாப்பாட்டைக் கொடுத்து வழியனுப்பிவிட்டுத் தானும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

கதிராமன் பள்ளிக்கூடத்தைக் கடந்துதான் காடியர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமாதலால் சுந்தரத்துடன் சேர்ந்தே சென்றான். அவன் பாடசாலை வாசலடியில் சற்றுத் தாமதித்தபோது, செம்மண்சாலைக்கு மேற்கே கிடந்த காடுகளைத் தழுவிக்கொண்டு குளிர் சில்லென்று வீசியது. 'என்ன இண்டைக்கு காத்து ஒருமாதிரி அடிக்குது?" என்று கூறிக்கொண்டே நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். பாதி நிலவின் ஒளியில் மேகங்கள் என்றுமில்லாத வேகத்துடன் மேற்கிலிருந்து கிழக்கே விரைவதைக் கண்டான். என்ன? இன்று ஒருநாளும் இல்லாதவாறு என்று தனக்குள்ளே வியந்துகொண்டவன், 'நீங்கள் போய்ப் படுங்கோ வாத்தியார், நான் வாறன்!" என்று சொல்லிவிட்டுக் காடியரிடத்தில் போய்த் துவக்கையும் வாங்கிக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தான். 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 13:06
TamilNet
HASH(0x55658bdcd858)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 13:06


புதினம்
Thu, 28 Mar 2024 13:06
















     இதுவரை:  24712482 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5711 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com