அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 21 arrow அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கே.என். ராமசந்திரன்  
Wednesday, 05 October 2005

அமெரிக்கா என்றதும் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான விஞ்ஞானிகள் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்றிருப்பதும், ஏராளமான அறிவியல் புதுப்புனைவுகள் அமெரிக்காவில் நிகழ்ந்திருப்பதும், விண்வெளியில் பற்பல அற்புதச் சாதனைகளை அவர்கள் செய்திருப்பதும் நினைவுக்கு வரும். ஆனாலும் அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் அறிவியலுக்கு ஒத்து வராத பல விஷயங்களைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறபோது வியப்பு மேலிடுகிறது. அத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு நவீன அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சியும் வானொலியும் செய்தி ஊடகங்களும் கூடத் துணை போவது மேலும் வியப்பானது. இன்று தீவிரமாகப் பேசப்படும் இரண்டு பிரச்சினைகளை மட்டும் இக் கட்டுரையில் விவரிப்போம்.

முதலாவது வெளிக்கோள் வாசிகளைப் பற்றியது. எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகங்களுக்கிடையிலான போர் என்ற கதையை ஆர்சன் வெல்ஸ் என்பவர் ரேடியோ நாடகமாக ஒலிபரப்பி அமெரிக்க மக்களைக் கதி கலங்க வைத்தார். அண்மையில் அது திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. ஆனால் அது கட்டுக்கதைதான். இருந்தாலும் அமெரிக்க மக்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் வேற்றுலக வாசிகள் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்வதாக நம்புகிறார்கள். அமெரிக்காவின் வேவு பார்க்கும் விண்கலங்கள், விண்வெளியில் ஒரு கிரிக்கெட் பந்து பறந்தால் கூடக் கண்டுபிடித்து விடும் திறமையுள்ளவை. அமெரிக்க உளவுத்துறைகள் வேற்றுலகத்திலிருந்து பறக்கும் தட்டுகள் எனப்படும் அடையாளம் தெரியாத அன்னியப் பொருள்கள் (மஊஞ) எதுவும் இதுவரை வந்ததற்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறினாலும் அரசு பொய் சொல்லுகிறது என்றே பெரும்பாலான அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள்.

அண்மையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடையாளம் தெரியாத அன்னியப் பொருள்களை ஆதரிப்பவர்களையும் மறுப்பவர்களையும் பட்டிமன்ற பாணியில் விவாதிக்க வைக்கிறார்கள். அவற்றில் கலந்து கொள்ளும் ஆதரவாளர்கள் தாமே அ.அ. பொருள்களைப் பார்த்திருப்பதாக அடித்துப் பேசுகிறார்கள். வேறு சிலர் அந்தப் பொருள்கள் பூமியில் தரையிறங்கியதாயும் அவற்றிலிருந்து வேற்றுலகவாசிகள் வெளிப்பட்டுத் தம்மைக் கடத்த முயன்றதாயும் சத்தியம் செய்கிறார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் பரபரப்பூட்டுவதற்காக இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் கூறப்படுவதை மறுத்தாலும் அ.அ. பொருள்களைப் பற்றிய உண்மை ஒரு வழியாக வெளிப்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மக்களிடம் அந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்தியுள்ளன. தரையிறங்கிக் கொண்டிருக்கிற அ.அ.பொருள்கள் என அவர்கள் காட்டும் படங்கள் சரியாகக் குவியப்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட விளக்குகள் அல்லது வட்டமான கிண்ணங்களின் படங்களாகவே தோன்றுகின்றன.

விவரமறிந்த விமானிகளும் விண்வெளி வீரர்களும் கூடச் சில சமயங்களில் அடையாளம் தெரியாத, விநோத வடிவம் கொண்ட பறக்கும் பொருள்களைப் பார்த்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளைப் பார்த்தது உண்மையாக இருக்கலாம். அவற்றை இனம் காண முடியாததால் மட்டும் அவை அ.அ. பொருள்களாகி விடாது. வேற்றுக்கோள்வாசிகள் தாக்கிய போது ஏற்பட்டதாகக் காட்டப்படும் காயங்கள் கூடச் சிகரெட்டால் சுட்ட புண்களைப் போலவே தோன்றுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிலர் தமது கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட காயங்களைக் காட்டி அவை வேற்றுக்கோள் வாசிகளுடன் நிகழ்ந்த கைகலப்பின் போது ஏற்பட்டவை என்று சத்தியம் செய்தார்கள். எங்கோ பெருந்தொலைவிலிருக்கிற கோளிலிருந்து யாரோ வந்து பூமிவாசிகளைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இல்லாத ஆதாரங்களை வைத்துக் கொண்டு அவர்கள் தொலைக்காட்சிகளில் தோன்றிப் பணம் பண்ணுகிறார்கள். அவர்கள் சொல்வதை அமெரிக்கர்களில் பாதிப்பேர் நம்பவும் செய்கிறார்கள்.

டார்வின் கொள்கை: அண்மைக்காலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கை பழைமைவாதிகளின் பகைக்கு ஆளாகியிருக்கிறது. அது ஒரு கருத்து தான் எனவும் அதற்கு உறுதியான ஆதாரம் கிடையாது எனவும் பூசாரிகள் அடித்துப் பேசுகிறார்கள். எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறைவன் புல் பூண்டு புழு, டைனாசார், மனிதன் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் படைத்தார் என்று கூறும் அறிவார்ந்த வடிவமைப்பு என்ற கொள்கையையும் பள்ளிகளில் போதிக்க வேண்டுமென்று ஓர் இயக்கம் நடந்து வருகிறது. ஒரு கடிகாரத்துக்குள் ஏகப்பட்ட பல் சக்கரங்களும் வில் சுருள்களும் நெம்பு கோல்களும் சீராக இயங்குவதைப் பார்க்கிற போது அதை அறிவார்ந்த வடிவமைப்பு முறை (ஐய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ற் ஈங்ள்ண்ஞ்ய்) தெரிந்த நிபுணர் ஒருவர்தான் உருவாக்கியிருக்க முடியும் என்பது உறுதியாகி விடுகிறதல்லவா? அதேபோலப் பிரும்மாண்டமானதும் பல கூறுத் தன்மையுள்ளதும் தடங்கலின்றிச் சீராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதுமான இந்தப் பிரபஞ்சத்தைப் பார்த்தவுடனேயே இது தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாது என்றும் யாரோ ஒரு மாமேதை மட்டுமே இதை உருவாக்கியிருக்க முடியும் என்றும் அறிய முடிவதாக அறிவார்ந்த வடிவமைப்பின் ஆதரவாளர்கள் அடித்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சு அறிவியல் கண்ணோட்டத்துடன் ஒத்துப் போகாவிட்டாலும் கேட்க இனிமையாக இருக்கிறது.

அறிவியல் கருத்துகள் இடைவிடாமல் மாறுதல்களுக்கும் சரிப்படுத்துதல்களுக்கும் சீர்திருத்தல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டேயிருப்பவைதான். ஆனால் அவை நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் செய்யப்படுகிறவை. பரிணாமக் கொள்கை வெறும் கருத்து மட்டுமே என்றும் அது உண்மையாகாது என்றும் சொல்லும் பழைமைவாதிகள், அடுத்து நியூட்டனின் நிறையீர்ப்புக் கொள்கையும் வெறும் கருத்துதான் என வாதிடலாம். நியூட்டனின் சமன்பாடுகளைப் பயன்படுத்திப் பொருள்களுக்கிடையிலான ஈர்ப்பு விசையைக் கணக்கிட முடிகிறது என்றாலும் விசை என்பது என்ன என்று தனியான விளக்கத்தை அவற்றால் தர முடிவதில்லை. தன்னுடைய கொள்கைகள் எல்லாம் ஏதோ ஒரு விசையைச் சார்ந்தவையாக இருக்கலாமென்றும் அத்தகைய விசையைப் பேரறிஞர்கள் நெடுங்காலமாகக் கண்டறிய முயன்றும் அது கைகூடவில்லை என்றும் நியூட்டனே சொல்லியிருக்கிறார். விசை என்று நியூட்டன் குறிப்பிடுவது கடவுளைத்தான் என்று வைதீகர்கள் கூறுகிறார்கள்.

மறைநூல்களில் கூறப்பட்ட படைப்பு முறையை பரிணாமக் கொள்கை மறுக்கிறது. மறைநூல்களில் கூறப்படும், வானில் பறப்பது போன்ற அற்புதச் செயல்களை நிறையீர்ப்புக் கொள்கை மறுக்கிறது. எல்லாரும் அதை நியூட்டனின் விதி என்று சொன்னாலும் அது ஒரு சட்டம் அல்ல. அது ஒரு கருத்து மட்டுமே. ஐன்ஸ்டீனின் நிறையீர்ப்புக் கொள்கையும் ஒரு கருத்து மட்டுமே. அந்தக் கருத்துகளைப் போலவே மறைநூல்கள் கூறும் மாற்றுக் கருத்துகளுக்கும் சம அந்தஸ்து அளித்து அவற்றையும் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்று வைதீகர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள்.

உலகின் சராசரி வெப்பநிலை உயர்ந்து வருகிறது என 30 ஆண்டுக்கால ஆய்வுக்குப் பின் விஞ்ஞானிகள் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி உயரவில்லை என்று பாரிஸ் ஹில்டன் ஒரு மாற்றுக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம். அதிபர் புஷ், ஹில்டனின் கருத்தை எடுத்துக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மறுத்து விட்டார். அமெரிக்காவில் பல தனியார் பள்ளிகள் மத நிறுவனங்களாலும், நன்கொடையாளர்களின் பண பலத்தாலும் நடத்தப்படுகிறவை. அவற்றில் பரிணாமக் கொள்கை, அறிவார்ந்த வடிவமைப்புக் கொள்கையுடன் ஒரு பின்குறிப்பைப் போலச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அதிபர் புஷ் கூட அதற்கு ஆதரவாகச் சட்டமியற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதிகளும் செல்வாக்குமிக்க பூசாரிக்கூட்டத்தை எதிர்க்க அஞ்சுகிறார்கள். அமெரிக்காவிலேயே அந்த நிலை என்றால் நம் நாட்டைப் பற்றிக் கேட்க வேண்டுமா?

நன்றி: தினமணி 04-10-2005.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
நான்..
ஈழத்து மலையகக் கூத்துக்கள்
சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை
மோகினிப் பிசாசு
நானும் என் எழுத்தும்
நேர்காணல் ஒன்றில்:
வாழ்புலம் இழந்த துயர்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 01:10
TamilNet
HASH(0x5655449e4948)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 01:10


புதினம்
Fri, 29 Mar 2024 01:10
















     இதுவரை:  24714711 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4834 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com