அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow அத்தியாயம் - 39
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அத்தியாயம் - 39   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Friday, 21 October 2005

39.

முன்னிரவு கடந்தபோது, கதிராமன் கூளாமோட்டையை அடைந்தான். அடர்ந்த அந்தக் காட்டுக்குள் நின்ற ஒரு பாலை மரத்தில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டபோது, இதுவரை இலேசாக வீசிக்கொண்டிருந்த கச்சான் காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. இடையிடையே வந்துவிழுந்த ஓரிரண்டு மழைத்துளிகள் ஈயக்குண்டுகள் போன்று, வேகத்துடன் வீழ்ந்தன. மழை பலமாகப் பெய்யும்போல் தோன்றியதால் கதிராமன் மரத்திலிருந்து இறங்கி, அந்தப் பெரிய பாலைமரத்தின் அடிப்பாகத்திலிருந்த கொட்டுக்குள் ஒதுங்கிக் கொண்டான். ஒரு ஆள் குந்தியிருக்கப் போதுமான அந்த மரக்கொட்டுக்குள் வசதியாக உட்கார்ந்துகொண்டு எதிரே தெரிந்த கூளாமோட்டையையும், அதைச் சுற்றிநின்ற மரங்களையும் கவனித்தான் கதிராமன். கச்சான் காற்று உக்கிரமாக வீசத்தொடங்கியது. மோட்டையின் கரைகளில் நின்ற வீரைமரங்கள் காற்றில் கிளைகளைச் சிலுப்பிக்கொண்டு பயங்கரமாக ஆடின. பாலைமரக் கொட்டுக்குள் இருளோடு இருளாகப் பதுங்கியிருந்த கதிராமன், 'சூறாவளியுக்கையல்லோ அம்பிட்டுக்கொண்டன்!" என்று எண்ணிக்கொண்டான்.

பாடசாலை அறையினுள் படுத்து நித்திரையாயிருந்த சுந்தரலிங்கம் சட்டென்று விழித்துக் கொண்டபோது, வெளியே சூறாவளிக் காற்றுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டே வீசியது. அவன் எழுந்து அறைக் கதவைத் திறந்தபோது, மழைச்சாரலும், இலைச்சருகுகளும் அவன் முகத்தில் பறந்துவந்து மோதின. வெளியே சென்று பார்க்கமுயன்ற அவனைக் காற்று தள்ளி வீழ்த்திவிடுவது போன்று வேகமாக வீசியது. கதவை இறுகப் பற்றிக்கொண்டு அவன் வெளியே பார்த்தபோது, மங்கிய நிலவில் புயலின் கோரப்பிடியில் அகப்பட்டுக் காட்டு மரங்களெல்லாம் தலைவிரி கோலமாகப் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. மரக்கிளைகள் சடசடவென முறிந்து புயலோடு அள்ளுண்டு பறந்தன. மரங்களும் மரங்களும் மோதிக்கொள்ளும் ஓசை! இலைகளும் கிளைகளும் காற்றிலகப்பட்டு எழுப்பும் ஓலம்! இவையெல்லாம், உய்யென்று கூவிய புயலின் கூச்சலுடன் சேர்ந்து, அந்தப் பிரதேசத்தையே கலக்கின. ஒரே பேய்க்காற்று!

சுந்தரம் தன் வாழ்க்கையிலே இப்படியொரு பயங்கரப் புயலைக் கண்டதில்லை. உலகத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்ட ஊழிக்காற்று இதுதானோ என்று அவன் பீதியடைந்து நின்றபோது, ஆங்காரத்தடன் வீசிய புயலில் பாடசாலையின் பாதிக்கூரை பிய்த்துக்கொண்டு பறந்தது. பாடசாலை மேற்கோப்பியம் காற்றின் வேகத்தைத் தாங்கமுடியாமல் கிறீச்சிட்டது. எங்கே பாடசாலைக் கட்டிடம் விழுந்துவிடுமோ என்று பயந்த அவன் மனதில் சட்டென்று வந்தது பதஞ்சலியின் நினைவு!

இந்தப் பயங்கரப் புயலில் அவள் எவ்வாறுதான் அந்தச் சின்னக் குடிசைக்குள் இருக்கிறாளோ? கதிராமனும் அவளுடன் இல்லையே! இந்நேரம் குடிசையின் கூரை பிடுங்கி எறியப்பட்டிருக்குமே! என்று எண்ணித் தவித்த சுந்தரம், ஆவேசம் வந்தவன்போல் அந்த இருளிலும், புயலிலும் பதஞ்சலியின் குடிசையை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடினான்.

எலும்பின் நிணக்கலங்களையும் உறைய வைக்கும் கடுங்குளிர்! பாதை தெரியாதவாறு மரக்கிளைகள் ஒடிந்து விழுந்து சாலையெங்கும் இறைந்து கிடந்தன. இடையிடையே காற்றின் வேகம் தணியும்போது விழுந்துகிடக்கும் மரங்களிலே மோதிக்கொண்டு ஓடினான் சுந்தரம். மறுபடியும் காற்று பேய்க்கூச்சலுடன் மரங்களைப் பிடுங்கி எறிகையில், சாய்ந்துவிழுந்த மரங்களோடு ஒண்டிக்கொள்வான். சுமார் கால்மைல் தொலைவிலிருந்த பதஞ்சலியின் குடிசையை அடைவதற்குள் அவன் பட்ட பிரயத்தனம் கொஞ்சமல்ல. ஒருவாறு குடிசையை அவன் சென்றடைந்தபோது, முற்றத்தில் இருந்த மால் சரிந்து கிடப்பதைக் கண்டான். குடிசை உயரமில்லாததாலும் உறுதியாகவும் இருந்ததால் ஒருவாறு புயலை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நின்றது.

ஆவேசத்துடன் வீசிய காற்று சற்றுத் தணிந்தபோது அவன் ஓடிச்சென்று குடிசையின் படலையடியில் நின்று, 'பதஞ்சலி! பதஞ்சலி!" என்று கத்தினான். புயலின் பயங்கர இரைச்சலில் அவன் அழைத்தது அவளுக்குக் கேட்டிருக்க முடியாது. எனவே படலையைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே சென்றான். அங்கே அச்சத்தால் அகன்ற விழிகளுடன் பதஞ்சலி குடிசையின் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பது அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.

சுந்தரத்தைக் கண்டதும், பயத்தாலும் குளிராலும் நடுங்கிக் கொண்டிருந்த அவள் எழுந்து நின்றுகொண்டே, 'நான் நல்லாய்ப் பயந்துபோனன் வாத்தியார்!" என்று கூறுகையில், திறந்திருந்த படலையின் வழியே காற்று குடிசையின் உள்ளும் வேகமாக வீசியது. 'வெளியிலை ஒரே பேய்க் காத்தாய்க் கிடக்கு! இண்டைக்கு உலகம் அழியப் போகுதுபோலை!" என்று சுந்தரம் சொன்போது, 'படலையைச் சாத்துங்கோ வாத்தியார்! காத்து விளக்கை அணைச்சுப்போடும்!" என்றாள் பதஞ்சலி.

அவன் படலையைக் கயிற்றால் கட்டினான். அவனுடைய தலைமயிர் மழையில் நனைந்திருந்ததைக் கண்ட பதஞ்சலி, என்ன வாத்தியார் நல்லாய் நனைஞ்சு போனியள்! முந்தியும் மழையிலை நனைஞ்சுதான் குலைப்பன் காச்சல் வந்தது.. இஞ்சைவிடுங்கோ, நான் இதாலை துடைச்சுவிடுறன்" என்று கூறிக்கொண்டே கொடியில் தொங்கிய தன்னுடைய சேலையை எடுத்துக்கொண்டு அவனருகில் சென்றான். எடுத்த எடுப்பிலே அச் சேலையால் அவனுடைய தலையைத் தானே துவட்டிவிட எண்ணியவள், சட்டென்று ஏதோ நினைத்தவளாய் சேலையை அவனிடமே நீட்டினாள்.

அதை வாங்கிக்கொண்ட சுந்தரத்தின் விழிகள் பதஞ்சலியின் கண்களை ஒருதடவை சந்தித்துக் கொண்டன. ஒருவகைக் கலக்கத்துடன் மிதந்த அவள் விழிகள் சட்டெனத் தாழ்ந்துகொண்டன. அந்தக் கணப்பொழுதுக்குள் அவளில் ஏற்பட்டிருந்த  ஒரு மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனான் சுந்தரம். நேர்கொண்ட பார்வையும், சுடர்விடும் ஒளியும் கொண்ட அவளுடைய கண்கள் ஏனிப்படித் தன்னுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் குனிந்து கொள்ளவேண்டும் என்று சுந்தரம் குழம்பிப்போனான்.

அவளுடைய சேலையை வாங்கித் தலையைத் துவட்டிக் கொண்ளும்பொழுது, சுந்தரத்துக்கு அந்தச் சேலையில் அவளுடைய உடலின் சுகந்தம் மணத்தது. இதுவரையில் சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் பதஞ்சலிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தைத் தவிர, அவனுடைய பிற உணர்வுகளெல்லாம் உறங்கிப் போயிருந்தன. ஆனால் அவளுடைய சேலையால் முகத்தைத் துடைக்கும்போது, அதன் ஸ்பரிசம் அவனுடைய உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிட்டன. அன்றொருநாள் பலாப்பழம் சாப்பிடுகையில் பதஞ்சலி, தன்னுடைய கரங்களையும் பிடித்து எண்ணெய் பூசியது நினைவுக்கு வந்தது. கூடவே அவளுடைய விரல்களின் மென்மையும், கதகதப்பும் நிறைந்த அந்த ஸபரிசம் மீண்டும் அவனுடைய கைகளுக்குள் படர்வது போன்றதொரு உணர்வும் ஏற்பட்டது.

குடிசைக்கு வெளியே புயல் ஓலமிட்டது. தன் கரங்களை உயர்த்தி மேலே கட்டியிருந்த கொடியில் சேலையை விரித்தபோது, பதஞ்சலியின் கட்டுடல் மங்கலான விளக்கொளியில் அற்புதமாகப் பிரகாசிப்பதைச் சுந்தரம் கண்டான். பெண்மையின் பூரிப்பு அத்தனையும் நிறைந்து விளங்கும் அவளின் உடலைப் பார்க்கையில், அவனுடைய நெஞ்சில் எழுந்த உணர்வலைகள் மெல்ல மெல்லப் படர்ந்து உடலெங்கும் வியாபித்தன.

எங்கோ ஒரு மரம் முறிந்துவிழும் மளார் என்ற ஓசை பயங்கரமாக ஒலித்தது. சுந்தரம் சட்டென்று உணர்ச்சிகளை அடக்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, இதற்குமேலும் இந்தச் சின்னக் குடிசைக்குள் நான் இவளுடன் தரித்திருப்பது நல்லதல்ல என்று எண்ணியவனாய், 'நீ இதுக்கை படுத்திரு பதஞ்சலி! நான் வெளியிலை மாலுக்கை போய்ப் படுக்கிறன்" என்று கூறினான். உணர்ச்சிகளை அடக்கியதால் அவனுடைய குரல் கம்மிப் போயிருந்தது. 'என்னை விட்டிட்டுப் போகாதையுங்கோ வாத்தியார்! எனக்குப் பயமாய்க் கிடக்கு... அப்பிடியெண்டால் நானும் வாறன்!" என்று துடித்துக்கொண்டு புறப்பட முயன்றாள் பதஞ்சலி.

உக்கிரமாக வீசும் இந்தப் புயலில் எப்படித்தான் அவளை அவன் வெளியே கூட்டிக் கொண்டுபோக முடியும்? புயலில் சரிந்துபோய் நிற்கும் அந்த மால் எந்தநேரமும் விழுந்துவிடக்கூடும் என்றெல்லாம் சிந்தித்த சுந்தரம், அந்தச் சின்னக் குடிசையைவிடப் பாதுகாப்பான இடம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொண்டான். எனவே தன் மன எழுச்சிகளை ஓரளவு அடக்கிக்கொண்டு, 'பதஞ்சலி! நீ அந்த மூலையிலை படு! நான் இந்தப் பக்கத்திலை படுக்கிறன்" என்று கூறியபோது, பதஞ்சலி தனது பாயில் போய்ப் படுத்துக்கொண்டாள்.

வெளியே புயல் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. ஒருசமயம் சோவென்று மெல்லிய இரைச்சலுடனும், மறுகணம் காதைச் செவிடாக்கும் பயங்கர ஒலியுடனும், மாறி மாறிக் காற்று சுழன்று சுழன்று அடித்தது.

குடிசையின் ஒரு மூலையில் படுத்திருந்த சுந்தரலிங்கத்தின் உள்ளத்திலும் புயல் வீசியது. பொல்லாத மென்மை உணர்வுகள் ஒருசமயம் புயலைப்போன்று கிளர்ந்தெழுந்து அலைக்கழிப்பதும், மறுசமயம் அடங்கிப் போவதுமாக இருந்தது. அவன் பதஞ்சலி படுத்திருக்கும் பக்கம் திரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டான்.

உணர்வுகளுடன் போராடிக்கொண்டு மெல்ல அயர்ந்து கொண்டுபோகும் சமயத்தில், உக்கிரமாக வீசிய புயற்காற்று, குடிசையின் கூரையிலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்துக்கொண்டு போயிற்று. அந்தத் துவாரத்தினூடாக உள்ளே நுழைந்து சுழன்றடித்த காற்றில் அரிக்கன் லாம்பு திடீரென அணைந்தது. கண்களைக் குருடாக்கி விடுவதுபோல் பளிச்சென்று ஒளிவீசிய ஒரு மின்னலைத் தொடர்ந்து, காதைக் கிழிக்கும் ஓசையுடன் அண்மையில் எங்கோ இடி விழுந்தது.

இடியோசை கேட்டு துணுக்குற்று விழித்துக்கொண்ட பதஞ்சலி, விளக்கு அணைந்துபோய் இருள் சூழ்ந்திருந்ததால் திகிலடைந்தவளாய், வீரிட்டு அலறிக்கொண்டு ஓடிச்சென்று சுந்தரத்தின் மேலே விழுந்து அவனை இறுகப் பற்றிக் கொண்டாள். பிய்ந்துபோன கூரையின் வழியாகச் சீறிக்கொண்டு நுழையும் சூறாவளியின் பேய்க்கூச்சலும், இடிமுழக்கத்தின் அதிர்வேட்டும் அவளைப் பயத்தால் நடுங்கச் செய்தன. அவள் சுந்தரத்தை இன்னமும் நெருக்கமாகக் கடடிக்கொண்டாள்.

இதுவரையும் சுந்தரலிங்கம் எந்த உணர்ச்சிகளை மறக்கவும், மறைக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தானோ, அந்த உணர்ச்சிகளெல்லாம் பதஞ்சலியின் நெருக்கமான அணைப்பிலே கட்டவிழ்த்துக்கொண்டு கிளம்பிவிட்டன. சட்டை அணியாது, மார்புக்குக் குறுக்கே சேலைமட்டும் கட்டியிருந்த அவளுடைய வளவளப்பான தோள்களும், அங்கங்களும் அவனுடைய மேனியில் நெருக்கமாக இணைந்தபோது, அவன் தன்னை ஒருகணம் மறந்தே போனான். உள்ளத்தின் விழைவை இதுவரை கட்டுப்படுத்தியிருந்தவன், இப்போது தன் உடலின் விழைவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.

அந்தக் கொடிய இருளிலே நடுங்கும் தன் கரங்களால் பதஞ்சலியைத் தன்னுடன் கூடச் சேர்த்தணைத்துக் கொண்டபோது அவன் இந்த உலகத்தை மறந்தான். அங்கு உக்கிரமாக வீசிக்கொண்டிருந்த புயலை மறந்தான். தான் யார் என்பதை மறந்தான். பதஞ்சலி யாரென்பதையும் அறவே மறந்துபோனான். காலங்காலமாகப் பிறவிகள்தோறும் தன்னைத் தொட்டும், தொடர்ந்தும் வந்த அதே பதஞ்சலிதான் தன்னுடனே சங்கமித்துவிட்டாள் என்று அவனுடைய இதயம் சொல்லிக் கொண்டது. இவள் என்னுடைய பதஞ்சலிதான்!... என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவன் அவளைத் தன்னுடன் இறுக அணைத்துக்கொண்டான்.

பதஞசலியின் நிலையோ வேறு. பயத்தின் காரணமாகவே அவள் சுந்தரத்தைச் சென்று கட்டிக்கொண்டாள். கரைகடந்த துயரம் அல்லது உள்ளத்தைக் கலங்கச் செய்யும் பீதி என்பவை ஏற்படும்போது, அவளுக்கு யாருடனாவது ஒண்டிக் கொண்டால்தான் நிம்மதியாக இருக்கும். அந்த உணர்வின் உந்துதலால்தான் அவள் குழந்தை மனதோடு விகற்பமின்றிச் சுந்தரத்திடம் போய் அணைந்துகொண்டாள்.

ஆனால் அந்த இருளிலே சுந்தரம் தன்னைச் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டபோது, அந்த அணைப்பையும், அதன் தீவிரத்தையும் அவள் இனங்கண்டு கொண்டாள். அந்தக் கணத்திலேயே அவள் இதுவரை அறியாத ஒரு உண்மையையும் புரிந்துகொண்டாள். அவன் யாரை விரும்புகின்றான்... அவன் விழிகளிலே தான் இதுவரை காலமும் அடிக்கடி கண்ட அந்தப் பார்வை..... என்பவையெல்லாம் அவளுக்குச் சட்டென்று வெளிப்படையாகப் புலனாகியது. இருப்பினும் அவளால் அந்த அணைப்பிலிருந்து தன்னைச் சட்டென்று விடுவித்துக்கொண்ள முடியவில்லை. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத ஒரு தவிப்பு.... அந்தத் தவிப்பைத் தொடர்ந்து அவள் மேற்கொண்டு எதையுமே தீர்க்கமாகச் சிந்திக்க முடியாமல் அப்படியே சோர்ந்துபோய் நினறுவிட்ட வேளையில்....

இதுவரை தான் படித்த புத்தகங்கள்மூலம் இடையிடை கண்டுணர்ந்த அந்தப் புதிய உலகத்தின் வாசல்கள் மீண்டும் திறப்பது போலவும், அந்தப் புதிய வாசலின் படிகளில் தான் ஒவ்வொன்றாய் ஏறியேறி மேலே வெகு உயரத்துக்குப் போவது போலவும் அவளுக்குத் தோன்றியது. வெளியே வீசும் கொடிய புயலின் ஓலம் அவளுக்கு எங்கோ வெகுதொலைவில் கேட்பது போலிருந்தது..... ஒரே இரைச்சல்.... ஒரே மயக்கம்.... அவள் தனக்கே உரித்தான சிறிய வாழ்க்கை வட்டத்தை விட்டுவிலகி, வெகுதூரம் பறந்து கொண்டிருந்தாள். எதற்காகத் தான் இப்படிப் பறக்கின்றேன் என்பதையெல்லாம் அவள் சிந்திக்கவேயில்லை. பறப்பதிலே ஒரு சுகம்! ஒரு இன்பம்! அவள் தன்னை மறந்து, பறப்பதற்காகவே பறந்து கொண்டிருந்தாள்.

இரவு மூன்று மணிபோல் கொண்டல் காற்று எழுந்து வீசிக் கச்சான் காற்றை அடங்கிய பின்னர் புயல் ஓய்ந்தது. அந்தக் கொடிய சூறாவளி அந்த இரவிற்குள் தண்ணிமுறிப்புப் பிரதேசத்தை அடியோடு கலக்கிச் சிதைத்திருந்தது.

வெளியே வீசிய புயல் அடங்கிய வேளையில்தான் உள்ளத்திலேயும், உடலிலேயும் கொந்தளித்துக் குமுறிய புயல் அடங்கியவனாய் சுந்தரம் சுயநினைவுக்குத் திரும்பி வந்தான். எங்கேயோ தொலைவில் வானவெளியில் இதுவரை சஞ்சரித்தவன், திடீரெனப் பூமிக்குத் தூக்கி எறியப்பட்டவன்போல் திகைத்துப்போனான். எது நடக்காது, நடக்கவே கூடாது என்று எண்ணியிருந்தானோ அது உண்மையில் நடந்துவிட்டது. அதன் உண்மையை உணர்ந்தபோது அவனுடைய இதயம் வெடித்துவிடும் போன்றிருந்தது. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த பதஞ்சலியின் கரங்களில் இருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு, அவன் குடிசையைவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே ஒரே ஓட்டமாக ஓடி, அந்த இருளுக்குள் சென்று மறைந்தான்.

தன்னந் தனியனாகப் பாலைமரக் கொட்டுக்குள் புயலடங்கும்வரை பதுங்கியிருந்த கதிராமன், புயலின் கோரத்தைக் கண்டு திகைத்துப் போனான். இரவெல்லாம் பதஞ்சலி என்ன செய்திருப்பாளோ என்றெண்ணி ஏங்கியவன், தங்களுடைய குடிசையின்மேல் விழக்கூடிய மரம் எதுவுமில்லை என ஆறுதல்பட்டுக் கொண்டான். விடியும் வேளையில் புயல் அடங்கியதுமே வீட்டை நோக்கிப் புறப்பட்டான். வழியெங்குமே மரங்கள் முறிந்து காடே சிதைக்கப்பட்டிருந்ததால் அவனால் வழக்கம்போல் வேகமாகச் செல்லமுடியவில்லை. தண்ணிமுறிப்பை அவன் அடைந்தபோது, பொழுது நன்றாக விடிந்துவிட்டது.

பகலின் ஒளியில்தான் புயலின் விளைவுகள் தெளிவாகத் தெரிந்தன. மரங்கள் முறிந்து மொட்டையாக நின்றன. வழியெங்கும் காட்டுக் கோழிகளும், வேறு பறவைகளும் புயலில் அடிபட்டுச் சிறகொடிந்தவையாய் இறந்துபோய்க் கிடந்தன. அவற்றைப் பார்த்தவாறே கதிராமன் சென்று கொண்டிருக்கையில், சுந்தரலிங்கம் அவசரமாகத் தன் பெட்டியையும் எடுத்துக்கொண்டு பாடசாலை வளவுக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தான்.

கதிராமன் அவனைக் கண்டதுமே, 'வாத்தியார், பாத்தியளே சூறாவளியை! எவ்வளவு மோசமாய் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டுது!" என்று கூற, சுந்தரம், 'ஓம்! எல்லாம் நாசமாக்கித்தான் போட்டுது!" என்று ஏதோ நினைத்தவனாய்ப் பதிலளித்தான். அவனுக்குக் கதிராமனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தைரியமில்லை.

சுந்தரத்தின் கையில் பெட்டியைக் கண்ட கதிராமன், 'என்ன வாத்தியார் வீட்டை போறியளே?" என்று கேட்டான். சுந்தரம், 'ஓம், அங்கை தண்ணியூத்திலை என்ன பாடோ தெரியேல்லை" என்று சுரத்தில்லாமல் பதிலளிக்க, 'சரி வாத்தியார் நடவுங்கோ, உங்கை பதஞ்சலி என்ன செய்தாளோ தெரியேல்லை!" என்று கூறிவிட்டு வேகமாகத் தன்னுடைய வளவை நோக்கி நடந்தான்.

வழியெல்லாம் மரங்கள் முறிந்துபோய்க் கிடந்தன. சிதைக்கப்பட்டுக் கிடந்த வளவை அவன் சென்றடைந்தபோது பதஞ்சலியை வெளியே காணவில்லை. குடிசையின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு மூலையில் படுத்திருந்த பதஞ்சலி, கதிராமனைக் கண்டதும் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டு கதறியழத் தொடங்கிவிட்டாள். 'என்ன பதஞ்சலி, நல்லாய்ப் பயந்து போனியே!" என்று அவன் ஆதரவாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, அவளின் முதுகை வருடியபோது, பதஞ்சலி எதற்காகவோ கதறிக்கதறி அழுதாள். 'ஏன் என்னை விட்டிட்டுப் போனனீங்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டு அரற்றிக்கொண்டே அழுத அவளை அணைத்திருந்த கதிராமன், 'நான் இனிமேல் உன்னை ஒருநாளும் விட்டிட்டுப் போகமாட்டன்!" என்று அன்புடன் கூறியபோது, அவள் அவனைத் தன்னடன் சேர்த்து இறுகக் கட்டிக்கொண்டாள். அந்த வேளையில், தான் எவ்வளவு தூரம் கதிராமனைக் காதலிக்கிறேன் என்பதைப் பதஞ்சலி தீர்க்கமாகப் புரிந்துகொண்டாள்.

இவ்வளவு காலமும் கள்ளமில்லாத உள்ளத்துடன் குழந்தையாகத் திரிந்த பதஞ்சலிக்கு இன்று எல்லாமே புரிந்துவிட்டது. சுவைக்கக் கூடாதென்ற கனியை உண்ட ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நேர்ந்த கதி இன்று பதஞ்சலிக்கும் நிகழ்ந்து விட்டிருந்தது. கற்பு என்றால் என்ன? தொட்டுப் பழகினால் என்ன? எல்லாப் பெண்களுக்கும் கற்பென்ற ஒன்று இருக்கவேண்டுமா? என்றெல்லாம் கேட்ட பதஞ்சலிக்கு, இன்று இந்தப் பயங்கரப் புயல் வீசிய இரவின் பின்னர், எல்லா வினாக்களுக்குமே விடை தெளிவாகத் தெரிந்துவிட்டது. தொட்டுப் பர்த்துச் சுட்டுக்கொண்ட குழந்தையொன்று நெருப்புச் சுடும் என்று அனுபவப்பட்டுக் கொள்வதுபோன்று, அவளும் தன்னைச் சுட்டுக்கொண்ட பின்தான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலைப் புரிந்துகொண்டாள். இப்போ அந்த விடைகள் தனக்குத் தெரிந்து விட்டனவே என்று அவள் குமுறியழுதாள். கதிராமன் எவ்வளவோ சொல்லித் தேற்றியபின்தான் அவளுடைய அழுகை ஒருவாறு அடங்கியது.

அதற்குமேல் அழுவதற்கு அவளால் முடியவில்லை. ஆனால் அதன்பின் பதஞ்சலி குழந்தையுள்ளத்தோடு சிரிக்கவும் மறந்து போனாள்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20
TamilNet
HASH(0x55f1e6095d40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20


புதினம்
Fri, 29 Mar 2024 09:20
















     இதுவரை:  24715604 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4274 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com