அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 17 February 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் 27 - 28
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் 27 - 28   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 30 January 2008
27.
கங்காதரன் சித்திர வேலாயுதர் கோவிற்பக்கமாக இருந்த அந்தத் தோட்டத்து வாசலில் போய் நின்றபோது, சித்திரா மான்போல ஓடிவரவே திகைத்துப் போனான். அன்று தன் மனதைக் கொள்ளை கொண்ட அதே பருவத்தில், இன்னும் செழுமையாக, மேலும் அழகாக இவளால் எப்படித்தான் தோற்றமளிக்க முடிகின்றது! ஒரு விதவையைப் போலவா இருக்கிறாள் இவள்? என்று அவன் கலவரப்பட்டுப்போன ஒரு கணத்தினுள் கங்கதரனுடைய சந்தேகம் சட்டெனத் தீர்ந்துவிட்டது. அக்கா! அக்கா! என்று அழைத்துக் கொண்டு ஓடும் இவள் விஜயாதான்! பவளமும் நிர்மலாவுந்தான் திருமணமாகிப் போய்விட்டார்களே! என எண்ணியவாறு கங்காதரன் வாசலில் நின்றபோது, அவனிடம் மீண்டும் ஓடிவந்த விஜயா, 'வாருங்கோ அத்தான்! வந்திருங்கோ!" என்று அழைத்தாள்.
அவளுடைய அழைப்பைக் கவனியாதவன் போல், 'சித்திரா எங்கே?" என்று கேட்ட கங்காதரனுடைய குரல் கம்மியது. விஜயா தமக்கை நின்றிருந்த திக்கைக் காட்டியதும், அந்தப் பாதையில் நடந்து வாழைகளின் மத்தியில் கல்லாய்ப் போய் நின்றிருந்த சித்திராவை நெருங்கினான் கங்காதரன். 
இவ்வளவு நீண்ட காலத்தின் பின்னர், கனமான பல விஷயங்கள் நடந்து முடிந்த பின்னர், தான் உயிருக்கு உயிராகக் காதலித்த கங்காதரனை இப்போ நேரில் காண்கையில், சித்திராவின் நெஞ்சுக்குள் பெரும் பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
தான் தவறாக அவனைப் புரிந்துகொண்டு, பொங்கலில் தன்னை நாடி, ஆவலுடன் வந்தவனைத் தான் கொடுரமாகத் திட்டிய சம்பவம் நினைவுக்கு வரவே, சித்திரா நெஞ்சம் கனக்கத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
'சித்திரா!" என நடுங்கும் குரலில் அழைத்த கங்காதரன், 'உனக்கு நடந்த கஷ்டமெல்லாத்தையும் நான் இண்டைக்கு இஞ்சை வந்த பிறகுதான் அறிஞ்சன் .... நான் அமெரிக்கவுக்குப் போகாமல் உன்னை ---- கலியாணம் செய்திருந்தால், உனக்கு இந்த நிலை வந்திருக்காது ..." என்று விழிகள் கலங்கக் கூறினான்.
உணாச்சிக் கடலாய்க் கொந்தளித்து நின்ற சித்திரா, ... 'நீங்கள் கடைசியாய்ப் பெத்தாச்சியைக் கேட்ட விஷயமெல்லாம் ..... பெத்தாச்சி சாகேக்கைதான், எனக்குச் சொன்னவ ..... உங்கடை நல்ல மனத்தை அறியாமல், அண்டைக்கு உங்களை எடுத்தெறிஞ்சு பேசிப் போட்டன்! .. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ!" என்று உணர்ச்சி பொங்கக் கூறிய சித்திரா, அவனுடைய காலடியில் விழுந்து கோவெனக் கதறியழத் தொடங்கிவிட்டாள்.
தன் அருமைக் கணவனை அகாலமாய் இழந்தபோது, கதறியழாத சித்திரா, கடைக்குட்டி செல்வம் பசியிலும், நோயிலும் மடிந்தபோது குமுறியழாத சித்திரா, தாயும் தந்தையுமாய் வழிநடத்திய வன்னிச்சியார் மறைந்தபோது அழாத சித்திரா, இப்போ வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள். முன்னைய சந்தர்ப்பங்களில் மனதைக் கல்லாக்கிக் கொண்டு வைராக்கியத்துடன் துயரைத் தாங்கிக்கொண்ட சித்திரா, இன்று கங்காதரனுடைய காலடியிலே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துக் குலுங்கிக் குலங்கிக் கோவென்று அந்தப் பிரதேசமே இரங்கும் வண்ணம் கதறியழுதாள்.
கங்காதரன் எதுவுமே தோன்றாமல் திக்பிரமை பிடித்தவன்போல் நின்றுவிட்டான். தங்களிருவருடைய வாழ்க்கையோடும் விளையாடியது ஒரு சின்னஞ்சிறு தப்பபிப்பிராயந்தானா? எனக் கலங்கி நின்ற கங்காதரன், தன் காலடியிலே தேம்பியழுது கொண்டிருந்த சித்திராவைத் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். 
அவனுடைய கைபட்ட மாத்திரத்தில் எழுந்து மெல்ல விலகிநின்ற சித்திரா அமைதியடைந்தவளாக, 'வாருங்கோ! வீட்டை போவம்!" என அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
விஜயா அங்கு கோப்பியுடன் காத்திருந்தாள். 'தங்கச்சியோடை கதைச்சுக் கொண்டிருங்கோ, நான் கொஞ்ச நேரத்திலை வாறன்!" எனக் கூறிச் சென்ற சித்திரா, கிணற்றடியில் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கழுவி இறுகத் துடைத்துக் கொண்டு அவாகளிடம் வந்தபோது, அவள் தன்னுடைய இயல்பான, அமைதியான சுபாவத்தை மீண்டும் பெற்றிருந்தாள்.
அவர்களிருவரையும் தனியே விட்டு, இரவுச் சாப்பாட்டைத் தயாரிப்பதற்காக விஜயா குசினிக்குள் போய்விட்டாள். வெகுநேரம் வரை சித்திராவுடன், இரண்டு வருடங்களுள் நடந்த சம்பவங்களையிட்டுப் பேசிக்கொண்ட கங்காதரன் புறப்படும் சமயத்தில், 'இராநேரம்! நில்லுங்கோ அத்தான் ரோர்ச் தாறன்!" என விடை பெற்றுக்கொண்டான் கங்காதரன்.
 
28.
அடிக்கடி அங்கு வந்துபோய்க் கொண்டிருந்த கங்காதரனை மிகவும் வாஞ்சையுடன் விஜயா கவனித்துக் கொண்டாள். தமக்கை அவனை முன்பு காதலித்திருந்த விஷயம் அவளுக்கும் தெரியுமாதலின் அவள் கூடியமட்டும், அவர்களுடைய தனிமையில் குறக்கிடாதிருக்க முயற்சித்தாள். தங்களுக்காக வாழ்ந்த தமக்கையின் வாழ்வு மறுபடியும் மலராதா என்ற ஆசை அவளுக்கு இருக்தத்தான் செய்தது.
ஆனால் சித்திராவோ தன்னால் முடிந்தவரை கங்காதரன் வரும் சமயங்களில் விஜயாவையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, எதாவது ஒரு காரியத்தைச் சாக்காகக் கொண்டு மெல்ல மெல்ல விலகிவிடுவாள். அவள் அவனிடமிருந்து மெல்ல விலகினாலும், தன்னுடைய உள்ளம் அவனிடமிருந்து அடியோடு விலகுவதில்லை என்பதைச் சித்திரா உணர ஆரம்பித்திருந்தாள்.
பெண்ணாகப் பிறந்த அவள், அன்று தன்னைக் கங்காதரன் தொட்டுத் தூக்கியபோது, அவனுடைய விழிகளில் தெரிந்த விஷயங்களையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டாள். அவன் இப்போதும் தன்னை மிகவும் அதிகமாகக் காதலிக்கின்றான் என்பதைக் கண்டுகொண்ட அவளுடைய இதயம், இடையிடையே அந்த ஞாபகம் வந்து போகையில் படபடவென அடித்துக் கொள்ளும்.
 à®ªà¯à®±à®¤à¯à®¤à¯‡ ஒரு தபசிக்கேயுரிய சோபையுடனும், அமைதியுடனும் உலவிவந்த சித்திரா, தான் அகத்தே இன்னமும் இரத்தமும் சதையும் கொண்ட பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்பதைச் சிலசமயம் அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.
கடந்த சில நாட்களில் பகல் முழுவதும் தன்னுடலை மாடாய்ப் போட்டு வருத்திக் கொண்டாலும், இரவில் வெகுநேரம் வரை தூக்கம் வராமல் அவதிப்பட்டாள் சித்திரா. இவ்வளவு நாட்களும் அவள் தன் இலட்சியங்களுக்காகப் போராடுவதிலேயே தன் கவனம் முழுவதையும் தீவிரமாகச் செலுத்தி வாழ்ந்திருந்தாள்.
இன்றோ, அந்த இலட்சியங்களில் தொண்ணூறு வீதம் நிறைவேறிவிட்ட நிலையில், அவளுக்குத் தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. இந் நிலையில் அவள், இதுவரை காலமும் மறந்திருந்த, பெண்மைக்கேயுரிய சில நளினமான உணர்வுகள் அவளுள் மெல்லத் தலைதூக்க ஆரம்பித்திருந்தன. இந்த உறுத்துதல்களை அவள் ஆரம்பத்தில் இனங்கண்டு கொள்ளவேயில்லை.
முன்பெல்லாம் வானொலிக்குக் காதுகொடுத்துக் கவனிக்காத அவளுடைய புலன்களை, இரவின் தனிமையிலே ஒலிபரப்பப்படும் சில இனிமையான சினிமாப் பாடல்கள் ஈர்க்கத் தொடங்கியிருந்தன. ஆறுமாத காலமெனினும் அவள் முழுமையாக அனுபவித்திருந்த தாம்பத்ய வாழ்க்கையின் சில அந்தரங்கமான இனிய இரகசியங்களை அந்தப் பாடல்கள் ஞாபகப் படுத்துகையில், சித்திரா மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டாள்.
தங்கை விஜயா அந்தப் பாடல்கள் சிலவற்றை அர்த்தம், அனர்த்தம் புரியாமல் சித்திராவின் காதுபடவே வாய்விட்டுப் பாடுகையில் அவளுக்க உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூசிப்போகும்.
நாளடைவில் அவள் அகத்தே அகலிகைக் கல்லாக உறைந்திருந்த சில உணர்வுகள் மெல்ல விழித்துக் கொண்டன! காரணம் அத்தானுடைய வரவா? குமாருவின் ஞாபகமா? விடை தெரியாமல் தவித்தாள் சித்திரா.
வெகுநேரம் வரை தூங்காது படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில் குமாருவின் நினைவு அவளைத் தணலாய்த் தகித்தது. அவனோடு கழித்த அந்த அற்புத நாட்களின் ஞாபகங்கள் வந்து, அவள் அமைதியைக் குலைத்தன.
இடையிடை அத்தானுடைய அன்பு கனியும் விழிகள் வந்து அலைக்கழித்தன. என்ன செய்வது என்றறியாமல் தன் நெஞ்சுடன் போராடிக் களைத்துவிடும் அந்தச் சமயங்களில், ஏனய்யா இந்த நிலையை எனக்குத் தந்தாய்? எனக் கணவனை எண்ணியுருகி மௌனமாகக் கண்ணீர் சொரிவாள் சித்திரா. 
இப்படிப்பட்ட வேதனை நிறைந்த இரவுகளின் வைகளைப் பொழுதொன்றிலே, அவளுடைய குமாரு அவளிடம் வந்தான். என்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ! கூட்டிக்கொண்டு போங்கோ! எனச் சித்திரா அரற்றிக் கெஞ்சியபோது, ... எனக்காக உன்னைப்போட்டு வதைத்துக் கொள்ளாதே சித்திரா! .. நான் நிறைவேற்றி வைக்காமல் விட்ட இலட்சியங்களையெல்லாம் நீ நிறைவேற்றி விட்டாய்! .... அதுவே எனக்கு நிறைவு! .. விஜயாவும் மணமாகிப் போனதன்பின், நீ தனியாக என்ன செய்வாய்? .. கங்காதரன் நல்லவன் ... கருகிப்போன உன்னுடைய வாழ்வு மீண்டும் துளிர்விட்டுத் தழைத்து வளர வேண்டும்! .. உன் அத்தானை மணந்துகொள் சித்திரா! ... என்று குமாரு அழகாகச் சிரித்தான்.
சித்திரா இந்தக் கனவைக் கண்டு, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது, பொழுது விடிந்து கொண்டிருந்தது. அவசரம் அவசரமாகக் கிணற்றிலே நீராடிவிட்டுத் தன் குமாருவின் சிதையை நோக்கி ஓடினாள் சித்திரா.
காலையிளங் காற்று வீசிய அந்தப் புனிதமான வேளையிலே ஒரு தெய்வத்தின் சந்நிதியில் நிற்கும் பக்திப் பரவசத்துடன், நீ போய் இவ்வளவு காலமும் என்னை வந்து காணாத நீ, இன்று காலையிலே என்னிடம் ஏன் வந்தாய் ஐயா! .. அன்பு பெருகும் இதயத்தைக் கொண்ட நீ உண்மையிலே என்னுடைய தெய்வமய்யா! .. என மனங் கசிந்து கண்ணீர் மல்கி நின்ற சித்திரா, தன்னுடைய விழிகளைத் திறந்து அந்தச் சிதையை நோக்கினாள்.
அங்கே, இதுவரை காலமும் பட்டுப் போய்க் கிடந்த அந்த மரத்தின் கணுவிலே ஒரு துளிர் உருவாகிக் கொண்டிருந்தது. கன்னங்கரிய பின்னணியில் செக்கச் செவேல் என்றிருந்த அந்த இளந்தளிர்கள் காலை வெய்யிலிலே பளபளத்தன.
... உன்னுடைய வாழ்க்கை மீண்டும் துளிர்க்க வேண்டும் சித்திரா! மறுபடியும், குமாரு கனவில் கூறியது சித்திராவுக்கு ஞாபகம் வந்தது.
இலேசாகிப்போன இதயத்துடன் அவள் வீட்டுக்குத் திரும்பினாள்.
 
(இன்னும் வரும்...)

மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 10
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 17 Feb 2026 20:56
TamilNet
The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous.
Sri Lanka: ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation


BBC: உலகச் செய்திகள்
Tue, 17 Feb 2026 20:56


புதினம்
Tue, 17 Feb 2026 21:19
















     இதுவரை:  28282535 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 17407 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com